திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.55 திருவலம்புரம் - திருநேரிசை
தெண்டிரை தேங்கி ஓதஞ்
    சென்றடி வீழுங் காலைத்
தொண்டிரைத் தண்டர் கோனைத்
    தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும்
    வலம்புரத் தடிகள் தம்மைக்
கொண்டுநற் கீதம் பாடக்
    குழகர்தாம் இருந்த வாறே.
1
மடுக்களில் வாளை பாய
    வண்டினம் இரிந்த பொய்கைப்
பிடிக்களி றென்னத் தம்மிற்
    பிணைபயின் றணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை ஏந்தித்
    தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர்
    வலம்புரத் திருந்த வாறே.
2
தேனுடை மலர்கள் கொண்டு
    திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை அஞ்சுங் கொண்டு
    அன்பினால் அமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும்
    வலம்புரத் தடிகள் தம்மை
நானடைந் தேத்தப் பெற்று
    நல்வினைப் பயனுற் றேனே.
3
முளைஎயிற் றிளநல் ஏனம்
    பூண்டுமொய் சடைகள் தாழ
வளைஎயிற் றிளைய நாகம்
    வலித்தரை யிசைய வீக்கிப்
புளைகைய போர்வை போர்த்துப்
    புனலொடு மதியஞ் சூடி
வளைபயில் இளைய ரேத்தும்
    வலம்புரத் தடிகள் தாமே.
4
சுருளுறு வரையின் மேலாற்
    றுளங்கிளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர்நு ழைந்த
    இளங்கதிர்ப் பசலைத் திங்கள்
அருளுறும் அடிய ரெல்லாம்
    அங்கையின் மலர்கள் ஏந்த
மருளுறு கீதங் கேட்டார்
    வலம்புரத் தடிக ளாரே.
5
நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால்
    நீண்டபுன் சடையி னானே
அனைத்துடன் கொண்டு வந்தங்
    கன்பினால் அமைய வாட்டிப்
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை
    மெய்ம்மையைப் புணர மாட்டேன்
எனக்குநான் செய்வ தென்னே
    இனிவலம் புரவ னீரே.
6
செங்கயல் சேல்கள் பாய்ந்து
    தேம்பழ மினிய நாடித்
தங்கயந் துறந்து போந்து
    தடம்பொய்கை அடைந்து நின்று
கொங்கையர் குடையுங் காலைக்
    கொழுங்கனி யழுங்கி னாராம்
மங்கல மனையின் மிக்கார்
    வலம்புரத் தடிக ளாரே.
7
அருகெலாங் குவளை செந்நெல்
    அகவிலை யாம்பல் நெய்தல்
தெருவெலாந் தெங்கு மாவும்
    பழம்விழும் படப்பை யெல்லாங்
குருகினங் கூடி யாங்கே
    கும்மலித் திற்கு லர்த்தி
மருவலா மிடங்கள் காட்டும்
    வலம்புரத் தடிக ளாரே.
8
கருவரை யனைய மேனிக்
    கடல்வண்ண னவனுங் காணான்
திருவரை யனைய பூமேல்
    திசைமுக னவனுங் காணான்
ஒருவரை உச்சி ஏறி
    ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையில் எளிமை யானார்
    வலம்புரத் தடிக ளாரே.
9
வாளெயி றிலங்க நக்கு
    வளர்கயி லாயந் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற
    அரக்கனை வரைக்கீ ழன்று
தோளொடு பத்து வாயுந்
    தொலைந்துடன் அழுந்த வூன்றி
ஆண்மையும் வலியுந் தீர்ப்பார்
    அவர்வலம் புரவ னாரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com